"தமிழகத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும்'
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூரில் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது : மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். தற்போது அணைக்கு நீர்வரத்து இருப்பதால் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குறையும். இதேபோல், தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் மாநில அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக் காலங்களில் மழைநீரைச் சேமிக்க அரசு விரைவான நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் வருமான வரிச் சோதனைகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.
வேட்பாளர்கள் அறிவிப்பு: தமிழகத்தில் வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் திமுக தவிர, மதச்சார்பற்ற எந்தக் கட்சியும் எங்களின் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தில் நல்லாட்சி மலர, நாங்கள் அனைத்து கட்சியினரையும் வரவேற்கிறோம்.
இதேபோல், தமிழகத்தில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டியில் பி.பழனியப்பன், அரூர் (தனி) தொகுதியில் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.
முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி மாவட்ட கழகச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.