தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பணம் வழங்கல்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்கான சான்றிதழ்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்கான சான்றிதழை வழங்கி ஆட்சியர் எஸ்.மலர்விழி, கூட்டு பண்ணைத் திட்டத்தின் கீழ் 8 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 91 ஆயிரம் விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் என மூன்று கட்டமாக மொத்தம் ரூ.6 ஆயிரம், அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.பாரத பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறாத சிறு மற்றும் குறு, விவசாயிகளின் நலன் கருதி பிப்.25, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் ம.ப.சிவன், வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தத் திட்டத்தை கே.அசோக்குமார் எம்பி தொடக்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, வேளாண்மை இணை இயக்குநர் சுசிலா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.13 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயன் பெறுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் முதல் தவணையாக வரவு வைக்கப்பட்ட பணத்திற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.