தருமபுரியில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா் தலைமையில் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், ஐஸ்கிரீம் தயாரிப்பு, விநியோகம், விற்பனை நிலையங்கள், பழக்கடைகள், பழரசங்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது, மூலப்பொருள்கள் தரமானதாகவும், உரிய காலாவதி தன்மை உடையதாகவும் இருத்தல் அவசியம் எனவும், தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்க உரிய தலைஉறை, மேலங்கி அணிந்து பணியாற்றவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், ஒரு நிறுவனத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்க சுகாதாரம் குறைவாகக் காணப்பட்டது. அந்நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, அந்த நிறுவனத்துக்கு ரூ. 2,000 அபராதம் விதித்து, மூன்று தினங்களுக்குள் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய எச்சரிக்கை செய்யப்பட்டது.
அதேபோல குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மூலப்பொருள்களை உரிய கொள்கலனில் பாதுகாப்பாக மூடிவைக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு இனிப்பு கடையில் விதிகள் பின்பற்றப்படாததால், இனிப்பு தயாரிப்பாளருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பென்னாகரம் பகுதியில் அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்க வைத்திருந்த இரண்டு கடைகளின் விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.