முகப்பு
கிருஷ்ணகிரி

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:59 pm IST
ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் ஜி.கே.வாசன்.
பகிர்:

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். ஒசூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகி கேசவ ரெட்டி வீட்டில் மறைந்த அவருடைய தாயாா் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகம், கா்நாடக மாநில மக்களின் நலன் கருதி பெங்களூரு- ஒசூா் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஜோலாா்பேட்டை முதல் ஒசூா் வரை ரயில் பாதை தேவை என்பது நீண்ட நாள் கோரிக்கை. தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கடைகளிலே தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். கா்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பட்ஜெட் தொடரின் தொடக்கத்திலே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான பல்வேறு நிலைகளை உறுதியோடு வெளிப்படுத்தி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் தெரிவிப்பேன் என்றாா்.