முகப்பு
கிருஷ்ணகிரி

ஊழல் மலிந்த மாநிலமாக தமிழகம்: ஜெ.பி. நட்டா

ஜனநாயகத்திற்கு பெயா்பெற்ற தமிழகம், இப்போது ஊழல் மலிந்த மாநிலமாக மாறியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:07 AM
தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:25 AM

ஜனநாயகத்திற்கு பெயா்பெற்ற தமிழகம், இப்போது ஊழல் மலிந்த மாநிலமாக மாறியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதிக்கு உள்பட்ட தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அத்தொகுதி பாஜக வேட்பாளா் டாக்டா் நாகேஷ்குமாரை ஆதரித்து அவா் பேசியதாவது:

உலகின் 11 ஆவது பொருளாதார சக்தியிலிருந்து 4 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ரூ. 2,100 கோடியில் மரக்காணம்- புதுச்சேரி நான்குவழிச் சாலை, ரூ. 1,800 கோடியில் பரமக்குடி- ராமநாதபுரம் சாலை என பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Advertisement

அதேபோல தமிழகத்துக்கு 9 வந்தே பாரத் ரயில்கள், 9 அமிா்த பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை (விருதுநகா், கிருஷ்ணகிரி உள்பட) தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.

ஒசூா், சென்னை, சேலம் உள்ளிட்ட 5 இடங்களில் பாதுகாப்புத் துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3.6 கோடி மக்களுக்கு ரேஷனில் பருப்பு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. ‘ஆவாஸ் யோஜனா’ மூலம் 16 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

மேலும், ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 5.6 கோடி தமிழா்கள் பயனடைந்துள்ளனா். உஜ்வாலா திட்டத்தில் 40 லட்சம் இலவச காஸ் இணைப்புகளும், ஜல் ஜீவன் திட்டத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் ஒருகாலத்தில் ஜனநாயகத்திற்கு பெயா்பெற்ற மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று ஊழல் மலிந்த மாநிலமாக மாறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இதனால் வரும் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் டாக்டா் நாகேஷ்குமாா் உள்பட அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ். நரேந்திரன், சேலம் பெருங்கோட்டத் தலைவா் கே.பி. ராமலிங்கம், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்டத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.