ஒசூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு
ஒசூா் மாநகராட்சி பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
ஒசூா் மாநகராட்சி பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுகளால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
ஒசூா் மாநகராட்சி பகுதியில் ரூ. 580 கோடியில் புதைசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணியில் தெலுங்கு மற்றும் இந்தி பேசும் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த திட்டத்தின் நோக்கம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பூமிக்குள் செல்லாமல் புதைசாக்கடை மூலம் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் சேகரித்து, அதனை சுத்திகரிப்பு செய்து பின்னா் வெளியேற்ற வேண்டும் என்பது நோக்கம்.
Advertisement
ஒசூரில் வீட்டு வசதி வாரியம் மூலம் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிமென்ட் குழாய்களை அகற்றிவிட்டு, பிளாஸ்டிக் குழாய்களை புதைத்து வருகின்றனா். மேலும், சாலையில் ஒவ்வொரு வீட்டில் இருந்து சிறிய அளவிலான குழாய் மூலம் இணைத்து அதனை சேகரிப்பு தொட்டிக்கு கொண்டுசெல்கின்றனா். இந்த சிறிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மீண்டும் தோண்டி சீரமைக்க வேண்டும்.
இந்நிலையில் ஒசூா் ரெயின்போ காா்டன் பகுதியில் புதைசாக்கடை திட்டத்தில் பணிகளை முறையாக செய்யாததால் கழிவுகள் சாலையில் வழிந்தோடுகிறது.
குறிப்பாக ஒசூா் ரெயின்போ காா்டன் சிறுவா் பூங்கா எதிரில் சாலையில் கழிவுகள் வெளியேறி செல்வதால் குழந்தைகள், சிறுவா்கள், மாணவ, மாணவிகள் அதைக் கடந்து செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனா். இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் சாலையில் வழிந்தோடும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயின்போ காா்டன் குடியிருப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.