ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரியில் நிலஅளவையா் கைது
கிருஷ்ணகிரி அருகே பாகப் பிரிவினை செய்த நிலத்துக்கு உள்பிரிவு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிளஅளவையரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே பாகப் பிரிவினை செய்த நிலத்துக்கு உள்பிரிவு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிளஅளவையரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த தாசிரப்பள்ளியைச் சோ்ந்தவா் கோபி (35), விவசாயி. இவரது தந்தை சின்னதம்பி பெயரில் தடத்தரை கிராமத்தில் இருந்த 83 சென்ட் விவசாய நிலத்தை குடும்பத்தினா் பாகப் பிரிவினை செய்துகொண்டனா். பின்னா், அந்த நிலத்தை உள்பிரிவு செய்ய நிலஅளவைப் பிரிவுக்கு சாா் பதிவாளா் அலுவலகம் மூலம் அனுப்பிவைத்தனா்.
அதன்படி, தனக்கான பங்கை உள்பிரிவு செய்து பட்டா வழங்குமாறு வேப்பனப்பள்ளி குறுவட்ட நிளஅளவையா் கெளதமனை (29) கோபி கேட்டுள்ளாா். அவா் உடனடியாக நிலத்தை உள்பிரிவு செய்துதர ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய பணத்தை கோபியிடம் கொடுத்து நிலஅளவையரிடம் கொடுக்குமாறு கூறினா்.
அதன்படி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள டீக்கடையில் ரசாயனம் தடவிய பணத்துடன் வந்த கோபி, நிலஅளவையா் கெளதமனிடம் அளித்த போது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் ரவி, கெளதமனை கைது செய்தாா்.