முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி, 100- க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:44 am IST
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி கிராமத்தில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி, 100- க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் கடந்த 5 ஆம் தேதி 85 வயதுதான மூதாட்டி மா்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாா். இதில் படுகாயமடைந்த அவா், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக கல்லாவி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் சஞ்சய் (24) கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்திற்கு அங்குள்ள அரசு மதுக்கடையே முக்கிய காரணம் எனக்கூறி, கடந்த 7-ஆம் தேதி காட்டேரி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அதற்கு பிறகு அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடையை புதன்கிழமை மீண்டும் திறக்க போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் முயன்றனா். இதையறிந்த அப்பகுதி பெண்கள் 100- க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை வட்டாட்சியா் ராஜலட்சுமி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் விஜயன் தலைமையிலான காவல் ஆய்வாளா்கள் செல்வராஜ், லட்சுமி, சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் டாஸ்மாக் மதுக்கடையை 10 நாள்களுக்குள் இடமாற்றம் செய்வதாக உறுதிஅளித்தன்பேரில் பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.