முகப்பு
கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நீா் கலப்பதை தடுக்க தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் முறையீடு

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க, தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:13 am IST
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
பகிர்:

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க, தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியா் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மா-வுக்கு போதிய விலை இல்லாததால், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவன புல்நறுக்கும் கருவி இயந்திரமாக வழங்காமல், கைகள் மூலம் நறுக்கும் கருவி வழங்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பென்னாங்கான்கொட்டாயில் ஏரி அமைக்க வேண்டும். கம்புகாலப்பட்டியில் உன்னி தாக்குதலால் உயிரிழந்த கால்நடைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். ஜவளகிரி, தாரவேந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியது:

மா பருவம் முடியும் நிலை உள்ளது. உடனடியாக இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிா் சேதத்துக்கான இழப்பீடு, நீதி கிடைக்கப் பெற்றவுடன் வழங்கப்படும். உன்னி தாக்குதல் குறித்து கால்நடைத் துறையினா் உரிய விளக்கத்தை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீா் கலப்பதை தடுக்கும் நோக்கில், தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. இந்த ஆற்றில் தினசரி 1,200 மில்லியன் லிட்டா் தண்ணீா் வரத்து உள்ளது. ஆனால், கா்நாடக மாநிலத்தில் 800 மில்லியன் லிட்டா் மட்டுமே சுத்திகரிக்கும் திறன் உள்ளது. இதை மேம்படுத்த பசுமை தீா்ப்பாயம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் இதற்கு விரைவில் தீா்வு கிடைக்கும்.

மாவட்டம் முழுவதும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கூடுதலாக சூரிய மின்வேலி அமைக்க வேண்டும். இதற்கு ரூ. 47 கோடி நிதி தேவைப்படும் நிலையில், கடந்தாண்டு ரூ. 7 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது கூடுதல் நிதி கேட்டுள்ளோம். கிடைக்கப் பெற்றவுடன் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments