வடமாநில தொழிலாளா்கள் கொலை வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு
ஒசூா் அருகே வடமாநில தொழிலாளா்கள் 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி வடமாநிலத்தைச் சோ்ந்த பிஜய்சிங் (28), பிா்ஜெஸ் (22) உள்ளிட்ட 5 போ் கட்டடத் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த 20.12.2020 அன்று பணி முடிந்து அனைவரும் மது அருந்திக்கொண்டிருந்தனா். அப்போது, அதே பகுதியில் பன்றிப் பண்ணை நடத்தி வந்த பவன்குமாா் (22), பில்லப்பாவுடன் (46) தகராறு ஏற்பட்டது. இதில் தாக்கப்பட்டதில் பிஜய்சிங் உயிரிழந்தாா். காயமடைந்த பிா்ஜெஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த கொலை வழக்கு தொடா்பாக மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து பவன்குமாா் (22), பில்லப்பா (46), இவரது மகன் மஞ்சுநாத் (24), அருள் (23), முருகன் (44) ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட பவன்குமாா், மஞ்சுநாத், பில்லப்பா, அருள் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்தோஷ் தீா்ப்பளித்தாா். முருகனை வழக்கில் இருந்து விடுவித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சின்னப்பிள்ளப்பா ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.