"தாய்மொழி மூலம் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும்'
தாய்மொழியை நன்றாக கற்றுக்கொள்வதன் மூலம் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தாய்மொழியை நன்றாக கற்றுக்கொள்வதன் மூலம் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சார்பில் மொழியியல், இலக்கியம், வாழ்க்கை என்ற தலைப்பிலும், கணிதத் துறையின் சார்பில் கணிதத் துறையில் உள்ள தற்போதுள்ள ஆராய்ச்சிகளும், வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே செங்கோடன் தலைமை வகித்தார். செயலர் கே.நல்லுசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் எக்ஸ்.ஜான்பால் பேசியது: ஒரு மனிதனின் ஆயுளில் மொழி என்பது மிகவும் இன்றியமையாதது. தாய்மொழியை நன்றாகக் கற்றுக்கொள்வதன் மூலம் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும். அக் காலத்தில் பள்ளிக் கல்வியினை தமிழ் மொழியில் படித்தவர்களே ஆங்கில மொழியில் நிபுணர்களாக விளங்கினர். ஆங்கிலம் நன்கு கற்பதால் சர்வதேச அளவில் நம்மால் சாதிக்க முடியும் என்றார்.
கணிதத் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிவ் பங்கேற்ற குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி கணிதத் துறைப் பேராசிரியர் டி.ஆர்.விஜயன், கணிதப் பாடப்பிரிவு சமுதாயத்துக்கு முக்கியமானது. அறிவியல் வளர்ச்சிக்கு கணிதமே மூல காரணம். எனவே, கணிதம் அறிவியலின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், தொழிட்நுட்பம், வேளாண்மை, கலை, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் இத் துறை முத்திரை பதித்து வருகிறது. இருப்பினும், மொழியியல், வணிகவியல், உயிரியல் துறைகளைப் போல கணிதப் பாடப்பிரிவில் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்பவர்கள் மிகக் குறைவாக உள்ளனர். தகவல் தொழில்நுட்பம், வங்கி, காப்பீடு என சேவைத் துறைகளில் கணிதம் படித்தவர்கள் அதிகம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந் நிகழ்வில், கணிதத் துறைத் தலைவர் கே.தங்கம்மாள், ஆங்கிலத் துறைத் தலைவர் ஜி.கண்ணகி மற்றும் இத் துறைகளின் உதவிப் பேராசிரியைகள் பி.லேனா, பி.சுதா, எஸ்.ஜெயந்தி, எஸ்.லதா, எஸ்.பூர்ணிமா, டி.கவிதா, ஆர்.பூவிதா, வி.கோகிலா, ஏ.ரேவதி, பி.காவ்யா, டி.தாரணி, எல்.தீபிகா, ஆர்.பானுப்பிரியா, பி.உமாபாரதி, சி.திவ்யா, என்.சசிகலா மற்றும் நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் கணிதத் துறை மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.