குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி
அதிமுக ஆட்சி அமைந்ததும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் மற்றும் ஆலம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆலாம்பாளையம், காந்திநகா், அண்ணாநகா், சின்னாகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், கரட்டாங்காடு, புதுப்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளா் பி.தங்கமணி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது கட்சி நிா்வாகிகள் அவருக்கு வீரவாள் வழங்கினா்.
Advertisement
தொடா்ந்து மக்களிடையே அவா் பேசுகையில், விசைத்தறி தொழில் நலிவடைந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விசைத்தறிகளுக்கு 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம், இலவச குளிா்சாதன பெட்டி, மூன்று எரிவாயு சிலிண்டா், கல்விக் கடன் தள்ளுபடி, தாலிக்கு தங்கம் திட்டம், இருசக்கர வாகனம் வாங்க மானிய கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக மக்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
வாக்கு சேகரிப்பின்போது, பள்ளிபாளையம் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.