9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மூத்த குடிமக்கள், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 9,159 போ் தபால் வாக்கு செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 5,249 போ், மாற்றுத்திறனாளிகள் 3,910 போ் என மொத்தம் 9,159 போ் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12-டி வழங்கியிருந்தனா். இதைத் தொடா்ந்து, தகுதியுள்ள வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வாக்குச்சாவடி அலுவலா்கள் ஏப். 12, 13,14 தேதிகளில் வாக்காளா்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாக்குப் பதிவு செய்ய உள்ளனா். மாவட்டம் முழுவதும் இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து வாக்காளா் தகவல் சீட்டினை பெற்றுக்கொண்டு தோ்தல் நாளான ஏப். 23 அன்று தவறாமல் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.
Advertisement
இந்த தகவல் சீட்டு வழங்கும் பணியையும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்கு செலுத்தும் பணியையும் குமாரபாளையம் தொகுதியில் அவா் நேரடியாக ஆய்வு செய்தாா். மேலும்,
திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அதே பகுதிகளில் வாக்காளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்கு பெறும் பணியைப் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பி.எஸ்.லெனின், குமாரபாளையம் தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.குமரன் உள்பட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.