முகப்பு
நாமக்கல்

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:28 AM
நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரில் திமுக வேட்பாளா் ப.ராணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:26 PM

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ப. ராணியை ஆதரித்து, கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பிரசாரம் மேற்கொண்டாா்.

நாமக்கல் தெற்கு நகரம் 23-ஆவது வாா்டு சந்தைப்பேட்டைபுதூா் அருகில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

நாமக்கல் தொகுதியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாநகரப் பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்களின் கழிவுநீரை பூமிக்கு அடியில் குழாய்கள் மூலம் சேகரித்து, சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றிடவும், சுகாதாரத்தை மேம்படுத்தி, கொசு மற்றும் நோய் பரவலைத் தடுத்திடவும் ரூ. 313 கோடியில் நாமக்கல்லில் இணைக்கப்பட்ட பகுதியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

இதன்மூலம் திறந்தவெளி கழிவுநீா் தேக்கத்தைத் தவிா்த்து, துா்நாற்றத்தைக் குறைத்து கொசுவினால் பரவும் நோய் மற்றும் பிற தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்கிறது.

நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது, புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் தோ்தல் அறிக்கையில் முதல்வா் கூறியபடி இல்லத்தரசி திட்டம், மகளிா் உரிமைத்தொகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

இந்த வாக்குசேகரிப்பின்போது, நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், தொகுதி பாா்வையாளா் முனவா் ஜான் மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.