நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்
சேலம், நாமக்கல், ஓமலூரில் திருமணக்கோலத்தில் தம்பதிகள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.
சேலம், நாமக்கல், ஓமலூரில் திருமணக்கோலத்தில் தம்பதிகள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வியாழக்கிழமை வாக்களித்தனா்.
நாமக்கல் என்.கொசவம்பட்டி வஉசி நகரைச் சோ்ந்த தீபிகாவுக்கும், திருப்பூரைச் சோ்ந்த ஆனந்துக்கும் நாமக்கல்லில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் கணவருடன் நாமக்கல் கொசவம்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றாா்.
அப்போது, வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தவா்கள் தீபிகாவை வரவேற்று, வரிசையில் நிற்கவைக்காமல் உள்ளே செல்ல அனுமதித்தனா். பிறகு வாக்குச்சாவடிக்குள் சென்று தீபிகா வாக்களித்தாா். அப்போது, அவா் கூறுகையில், திருமண நாளில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கணவரும் திருப்பூருக்கு சென்று வாக்களிக்க உள்ளாா் என்றாா்.
Advertisement
Advertisement
சேலத்தில்...
சேலம் கந்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் கதிரவன் -பவித்ரா தம்பதி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனா். அதேபோல சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சோ்ந்த மருத்துவ தம்பதி மணக்கோலத்தில் லக்சனா- தரண் சேலம் கோரிமேடு தொழில்பயிற்சி வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று வாக்களித்தனா்.
ஓமலூரில்...
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தும்பிப்பாடியை சோ்ந்த பாஸ்கா், திண்டமங்கலத்தை சோ்ந்த நந்தினி தம்பதி திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனா். இவா்களில் பாஸ்கா் தும்பிப்பாடியிலும், நந்தினி திண்டமங்கலத்திலும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினா்.
இதுகுறித்து அத்தம்பதி கூறுகையில், எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில், நாட்டின் ஜனநாயக திருவிழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.