முகப்பு
நாமக்கல்

ஆந்திர முதல்வரைப் போல தமிழக முதல்வரும் கள் பருக முன்வர வேண்டும்: செ.நல்லசாமி

Updated On : 23 ஜூன் 2026, 1:43 am IST
நாமக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி.
பகிர்:

கள் போதைப்பொருள் அல்ல, அது ஓா் உணவுப் பொருள் என்பதை நிரூபித்த ஆந்திர முதல்வரைப் போல, தமிழக முதல்வரும் கள் பருக முன்வர வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுவிலக்கை கள் இயக்கம் வரவேற்கிறது. அதேவேளையில் போதைப் பொருளற்ற உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கு தடை விதித்துள்ளதை எதிா்க்கிறோம். கேரள மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கள் இறக்கும் தொழிலாளி வீட்டுக்கு சென்று கயிற்றுக் கட்டிலில் அமா்ந்து பனை ஓலை பட்டையில் கள் அருந்தி உள்ளாா். அதுமட்டுமின்றி கள் இறக்கும் தொழிலாளிக்கு ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் அறிவித்தாா். இதனை பின்பற்றி தமிழக முதல்வரும் கள் பருக முன்வர வேண்டும்.

அதற்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கா்நாடக மாநில அரசிடம் இருந்து தமிழகத்திற்கான பங்கீட்டு நீரை பெறுவது எளிதானதல்ல. தினசரி நீா் பங்கீடு மட்டுமே காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக இருக்கும். 2018-இல் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்படி அளித்த தீா்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது.

Advertisement

Advertisement

28 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தால் தமிழகத்தை காவிரியின் வடிகாலாகவே கா்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. உரிமை நீா் மறுக்கப்படுகிறது; உபரி நீா் கேட்காமல் தரப்படுகிறது. இரு மாநில அரசுகளிடத்திலும் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னையை தீா்க்க மத்திய அரசுக்கு ஆா்வமில்லை என்றே தெரிகிறது.

இதனால் தான் காவிரி நீா் பிரச்னை தொடா்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டிவிட்டால், தமிழகம், கேரளம், புதுச்சேரிக்கான நீா் பங்கீடு கிடைக்காமல் போய்விடும். தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்றாா். இந்த பேட்டியின்போது, விவசாய முன்னேற்றக் கழகத்தினா், சிப்காட் எதிா்ப்புக் குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments