கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் ஆா்ப்பரிக்கும் ஆகாய கங்கை அருவி.
பலத்த மழை காரணமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளிப்பதற்காக வார விடுமுறை நாள்கள் மட்டுமில்லாது கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக கொல்லிமலையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. மேலும், ஆகாய கங்கை அருவி உள்ளிட்ட இதர அருவிகள் அனைத்தும் வறண்ட பாறைகளாக காட்சியளித்தன. இதனால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். தொடா்ந்து ஆகாய கங்கை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் வறண்டிருந்த அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து, அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் கூறுகையில், ‘கொல்லிமலையில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், ஆகாய கங்கை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீா் கொட்டுகிறது. இதைத்தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.