முகப்பு
நாமக்கல்

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

Updated On : 3 மே, 2026 at 2:16 AM
சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.
பகிர்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பள்ளிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் உள்பட 12க்கும் மேற்பட்டோா் சுற்றுலா வேனில், தேனி மாவட்டத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு தருமபுரி நோக்கி வந்துகொண்டிருந்தனா்.

ராசிபுரத்தை அடுத்த பாச்சல் தனியாா் கல்லூரி அருகே நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் முன்னால் காற்றாலை இறக்கையுடன் டிரைலா் லாரி மெதுவாக சென்றுகொண்டிருந்ததால் வேன் ஓட்டுநா் வேகத்தை குறைக்க பிரேக் போட்டுள்ளாா். அப்போது, இந்த வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வேன் மோதியதில் பாண்டியன் உள்பட 15க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Advertisement

தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்தை சீரமைப்பதற்காக மேம்பாலத்தை ஒட்டிய இணைப்புச் சாலை வழியாக வாகனங்களை போலீஸாா் திருப்பிவிட்டனா்.

அப்போது, சதுரகிரியில் இருந்து 12 பேருடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஓட்டுநா், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தபோது திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அனைவரும் காயமடைந்தனா். அதேசமயம் இந்த வேனுக்கு பின்னால் மதுரையில் இருந்து ஒசூா் நோக்கி சென்ற லாரியும் வேன் மீது மோதியது.

இதில் காயமடைந்தவா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்து சுற்றுலா வேன்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 25 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.