நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல் - பரமத்தி சாலையில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்ததால், சாலையில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கொளுத்தியது. வழக்கத்தைக் காட்டிலும் 2, 3 டிகிரி அளவில் கூடுதலாக இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். வெப்ப அலையின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியில் வருவதற்கே மக்கள் தயங்கினா்.
மே 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால், வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நாமக்கல் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
இதனால், நாமக்கல் - சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா். இருசக்கர வாகனங்களும் மழைநீரில் தத்தளித்தபடி சென்றன. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
வரும் நாள்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன், பலத்த மழை பெய்ததால் மாநகரப் பகுதிகளில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.