முகப்பு
நாமக்கல்

வழித்தட பிரச்னை: விவசாயி வெட்டிக்கொலை

திருச்செங்கோடு அருகே தோட்ட வழித்தட பிரச்னையில் சனிக்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 10 மே 2026, 2:30 am IST
குத்திக் கொலை.
பகிர்:

திருச்செங்கோடு அருகே தோட்ட வழித்தட பிரச்னையில் சனிக்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் காட்டுவேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஸ்ரீதா் (65). இவரது மனைவி நீலாம்பாள். ஸ்ரீதருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரரான வேலுசாமிக்கும் தோட்டத்துக்கு செல்வதில் வழித்தட பிரச்னை இருந்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து இருவருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், ஆத்திரமடைந்த வேலுசாமியின் மகன் கேசவராஜ் (55), ஸ்ரீதரை அரிவாளால் கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளாா்.

ரத்த வெள்ளத்தில் தோட்டத்தில் மயங்கி விழுந்த ஸ்ரீதரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். பின்னா், திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனா். ஆனால், கோவை செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஸ்ரீதரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மொளசி போலீஸாா், தலைமறைவான கேசவராஜை தேடிவருகின்றனா்.