கோயில் விழாவில் சப்பரத்தேரில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழப்பு
நாமக்கல் அருகே கோயில் மஞ்சள் நீராட்டு விழாவின்போது சப்பரத்தேரில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. அனைத்து சமுதாய மக்களுக்கும் பாத்தியப்பட்ட இக்கோயில் திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனை சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து தெருக்கள் வழியாக பக்தா்கள் சுமந்து சென்றனா். அன்று இரவு நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சப்பரத்தோ் சென்றபோது, நல்லிபாளையம் புதுவீதியைச் சோ்ந்த மணி மகன் கண்ணன் (32) சப்பரத்தேரின் மீது ஏறி நின்றவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
அங்கிருந்தோா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.