சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல்-டீசல் விற்பனையகத்துக்கு ஐ.எஸ்.ஒ. தரச் சான்றிதழ்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பெட்ரோல்-டீசல், ஆயில் விற்பனையகத்துக்கு முதன்முறையாக ஐ.எஸ்.ஒ. 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் பெட்ரோல்-டீசல், ஆயில் விற்பனையகத்துக்கு முதன்முறையாக ஐ.எஸ்.ஒ. 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சங்ககிரியில் மழை பொய்த்து வருவதால், விவசாயிகள் மாறுபட்ட தொழிலாக லாரிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகின்றனர். 1959-ஆம் ஆண்டில் 20 லாரிகளுடன் கூடிய இத் தொழில், தற்போது 15 ஆயிரம் லாரிகள் என்ற அளவில் இயக்கப்பட்டுவருகின்றன.
1974-ஆம் ஆண்டு குறைந்தளவிலான உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், தற்போது 3 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
உறுப்பினர்கள் லாரிகளில் அதிகளவில் பணம் எடுத்துச் செல்வதை தவிர்ப்பதற்காக, லாரிகளுக்கு இந்தியாவில் இந்தியன் ஆயில் முகவராகச் செயல்படும் பெட்ரோல்-டீசல் விற்பனையகம் மற்றும் ஆயில் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு மூலம் சலுகை விலையில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளவும், அதற்கான தொகையை சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்திலோ அல்லது இணையதளம் மற்றும் அந்தந்த வங்கிகளிலும் செலுத்தி ஸ்மார்ட் கார்டை புதுப்பித்துக்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்திதரப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் முகவராகச் செயல்பட்டு வரும் இச்சங்கம் தொடர்ந்து, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பெட்ரோல்-டீசல் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருவதோடு, ஆயில் மற்றும் லாரிகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்பனை, விபத்து மற்றும் பழுதடைந்த லாரிகளை மீட்பு வாகனம் மூலம் அருகில் உள்ள பட்டறைகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறது.
இதுகுறித்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கேபிஆர்.செல்வராஜ் கூறியது: சங்க நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, முதன்முறையாக தரச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, சென்னை, ஆலந்தூரில் செயல்பட்டுவரும் நிறுவனத்தில் விண்ணப்பித்து, அவர்கள் பல்வேறு தர ஆய்வுகளை நடத்தி எங்களது சங்க விற்பனையகங்களுக்கு முதன்முறையாக ஐ.எஸ்.ஒ. 9001:2015 தரச் சான்றிதழை வழங்கியுள்ளனர் என்றார்.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் முதன்முறையாக ஐ.எஸ்.ஒ. தரச் சான்றிதழ் பெற்றமைக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, லாரி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.