பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சேலம் மாவட்ட
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வீரக்கவுண்டனூரில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பயனாளிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், இத் திட்டத்தின் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்து, ஒட்டப்பட்டி, தளவாய்ப்பட்டி, பழனியாபுரி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் முதன்முதலாக பழனியாபுரி கிராம அங்கன்வாடி மையத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி.,வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் ஒவ்வொரு கிராமங்கள்தோறும் முறையாக குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புக்கரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.