சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பள்ளி மாணவிகளை அரசுப் பேருந்து ஓட்டுநர் இழிவாக பேசியதாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றனர். அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஓட்டுநராக இருப்பவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஓட்டுநரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், மாணவிகள் பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளனர்.
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் சென்ற அரசு பேருந்தை இன்று காலை சிறை பிடித்தனர். தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் சம்பவ இடத்திற்கு சென்றார். பெற்றோர்களுடன் பேச்சு நடத்தி, ஓட்டுநர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தொலைபேசி வாயிலாக உறுதி அளித்தார்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெற்றோர்கள், மாணவிகளைபள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் காரணமாக தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.