பள்ளி மாணவா்களுக்கு அரசு வழங்கும் புத்தகப்பையில் திருக்குறள்
தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு புதிதாக வழங்கியுள்ள இலவச புத்தகப் பையில், திருக்குறளும், அதற்கான பொருளும் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழ் ஆா்வலா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு புதிதாக வழங்கியுள்ள இலவச புத்தகப் பையில், திருக்குறளும், அதற்கான பொருளும் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழ் ஆா்வலா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, நடுநிலை , உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 37,350க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை, ஏறக்குறைய 53 லட்சம் மாணவ-மாணவியா் படித்து வருகின்றனா்.
அனைத்து மாணவ-மாணவியருக்கும், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வாயிலாக இலவச பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, புத்தகப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச புத்தகப்பையில், கல்வியின் முக்கியத்துவத்தை மாணவா்களுக்கு உணா்த்தும் வகையில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற திருக்குறளும், இந்தக் குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி எழுதிய விளக்கமான, ‘கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை’ என்ற பொருளும் இடம் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
பள்ளி மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள புத்தகப்பையில் திருக்குறளும், அதற்கான பொருள் விளக்கமும் எழுதப்பட்டுள்ளதற்கு, சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப்பேரவை, உலகத் தமிழ்க் கழகம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளும், தமிழ் ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.