திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தவெக அரசின் ஆணவத்தின் வெளிப்பாடு: தமிழிசை
திருப்பரங்குன்றத்தில் விளக்கமேற்ற தவெக அரசு அனுமதியளிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
மதுரை திருப்பரங்குன்றத்தில் விளக்கமேற்ற தவெக அரசு அனுமதியளிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், இதற்கு முந்தைய அரசான திமுக, தன் ஆட்சியை இழந்தது.
மக்களின் உள்ளுணர்வை இறை உணர்வை மதக் கலவரம்போல சித்திரிப்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
Advertisement
Advertisement
இறையன்போடு பணிவோடு திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றி கும்பிட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால், இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நடைமுறையே தொடரும் என்றும், விளக்கேற்ற விட மாட்டோம் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் அப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், அவருக்கு வெளிச்சம் பிடிக்காது; இருட்டுதான் அவருக்குப் பிடிக்கும்.
சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வழக்காடு மன்றத்திலேயே தீர்ப்பு வந்தபிறகும், விளக்கேற்ற அனுமதியளிக்க மாட்டோம் என்று சொல்வது ஆணவத்தின் வெளிப்பாடு.
ஏதோ விசில் கொஞ்சம் சத்தமாகக் கேட்டு விட்டதால், பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால், பக்தர்களின் குரல், உங்கள் விசில் சத்தத்தைவிட உறுதியானது; வலிமையானது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணாமலையின் மக்கள் இயக்கம் குறித்து பேசியதாவது, இன்னொரு முகத்தை (அண்ணாமலை) வைத்து அரசியல் செய்கின்ற நிலைமை பாஜகவுக்கு கிடையாது. காங்கிரஸ் கட்சியில் வேண்டுமானால் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் என ஒவ்வொரு முகமும் காண்பித்து, திமுகவின் முதுகில் குத்தலாம்.
பாஜகவின் ஒரே முகம் தாமரை முகம்தான். வேறு முகங்களைக் காண்பித்து, பாஜகவுக்கு மாற்று சக்திகளைத் தேட வேண்டிய நிலைமை இல்லை.
இங்கிருந்த இளைஞர்கள் யாரும் செல்லவில்லை. சுயநலவாதிகள் வேண்டுமானால் சென்றிருப்பார்கள். பொதுநலவாதிகள் யாரும் இங்கிருந்து செல்லவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.