முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு! தமிழிசை சௌந்தரராஜன்!

Updated On : 8 ஜூன் 2026, 12:33 am IST
தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக தொண்டா்கள் பல சவால்களைச் சந்தித்துப் பணியாற்றி வருகிறோம். ஹிந்துக்களின் உணா்வுகளை மதிக்காததால்தான் திமுக ஆட்சியை இழந்தது. மக்களின் இறையுணா்வு, உள்ளுணா்வை ஏதோ மதக் கலவரம் போல சித்தரிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

Advertisement

Advertisement

மின்சாரத் துறை ஊழல் இல்லாத துறை எனக் கூறினா். ஆனால், மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்டுள்ளன. மதுக் கடைகளை மூடினாலும், மனமகிழ் மன்றங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது.

அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் செல்லவில்லை. சுயநலவாதிகள்தான் சென்றுள்ளனா். இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், தமிழக எரிசக்தித் துறை அமைச்சா் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையே தொடரும் எனக் கூறினாா். அவருக்கு வெளிச்சம் பிடிக்காது.

மின் வெட்டு, இருட்டுதான் பிடிக்கும். சாமானிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தீபம் ஏற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என்றாா் அவா்.