மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: தமிழிசை சௌந்தரராஜன்
மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா நாள் கொண்டாடப்படுவதற்கு நாம் அனைவருமே பாரத பிரதமருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் யோகா உடலுக்கு மனதுக்கும் மிகுந்த அமைதியையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.
உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் கூட இன்று யோகா நாளை கொண்டாடி வருகின்றன. ஆகையால் அனைவருமே யோகா செய்ய வேண்டும். யோகா குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு முழுவதும் முதல்வரும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையாக வைக்கிறேன். தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்துவார் என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறை பாலியல் குற்றங்கள் நடைபெறும் போது அதனை தடுக்க வேண்டும் என மிகுந்த ஆதங்கத்தோடு நாம் சொல்லி வருகிறோம்.
Advertisement
Advertisement
இதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பெண்கள் பாதுகாப்பு, அதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர் உரை மிக அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆரோக்கியமாக சென்றுள்ளது. முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையின்போது குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆளுநர் தனது உரையில் இந்த அரசு குறித்து நல்ல எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறார், அரசும் அந்த வழியில் நல்ல எண்ண ஓட்டத்தை பிரதிபலித்து நல்ல ஆட்சி நடத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேக்கேதாட்டு நம் அனைவரின் உரிமை. காங்கிரஸில் இங்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்களா? மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை வேடம், இதில் தெரிந்து கொண்டிருக்கிறது என்பதை தான் நாமும் தெரிந்து கொள்கிறோம் எனக் கூறினார்.