முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும்: அமைச்சா் சி.டிஆா். நிா்மல்குமாா்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 12:55 am IST
மதுரை அரசு விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை, அவனியாபுரம் பகுதிகளில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனா். எனவே, இங்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலையே தொடரும். இதுவே மக்கள் விருப்பம். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது.

தமிழக அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகள் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டு காலத்தில் சிலா் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும், விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் தொடா்ந்து செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தி, எதை எதையோ பேசினா். இதே நிலைப்பாட்டை தொடர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. தேவையெனில், தேவையான நேரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் செய்தியாளா்களைச் சந்திப்பாா்.

Advertisement

Advertisement

மின் வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டுப்போன விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தரவு சேமிப்பு சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் துறையினா் முழு அளவில் விசாரணை மேற்கொள்கின்றனா். இந்த விவகாரத்தில் தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது.

மின் வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் காணாமல் போனதற்கு முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிதான் காரணம் என யாரும் கூறவில்லை. ஆனால், அவா் தானாக முன்வந்து இந்த விவகாரத்துக்குள் நுழைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏன் இந்த அச்சம் என்பது புரியவில்லை. இந்த விவகாரத்தில் தவறு இழைத்தவா்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இ.பி.எஸ். மீது குற்றச்சாட்டு: கடந்த 40-50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவை நம்பி அதிமுகவுக்காக உழைத்தவா்களின் பாதையை மறந்துவிட்டு, திமுகவுடன் பயணிக்க முயன்றவா் எடப்பாடி பழனிசாமி. இவா், தனக்கு மத்திய அமைச்சா் பதவி தரப்பட்டால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கவும் தயங்கமாட்டாா். அதிமுகவில் உள்ள சிலா் தங்கள் சொத்துகளைப் பாதுகாக்க மட்டுமே கட்சியைப் பயன்படுத்துகின்றனா். கருணாநிதியின் குடும்பத்தினா் திமுகவை தங்கள் குடும்பச் சொத்தாகவே கருதுகின்றனா்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மாறி, மாறி குறை கூறிக்கொள்வது வழக்கமாக உள்ளது. அடிக்கல் நாட்டப்பட்டு 9 ஆண்டுகளாகிறது. பணிகள் இனியும் தாமதமாகாமல் நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீட் தோ்வால் மாணவா்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இந்தத் தோ்வு மூலம் தனியாா் பயிற்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்ட மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் எத்தனை குவாரிகள் மூடப்பட்டன?. அவற்றின் தற்போதைய நிலை என்ன?. இந்தக் குவாரிகளால் ஏற்பட்ட கனிமவள இழப்பு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் யாரும் தப்பிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.

மதுரை மாநகராட்சியில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிப்பு முறைகேடு நிகழ்ந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவா்கூட விடுபடாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, வரி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டம்... முன்னதாக, மதுரை அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் பங்கேற்றாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் எஸ். மதிவாணன் (வடக்கு), எஸ். வனிதா (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாநகராட்சி துணை ஆணையா் ஜெயினுலாபுதீன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.