தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுப்பு
தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பாமகவினா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
சங்ககிரி: தேவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, பாமகவினா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தேவூரில் கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு முன்பே சித்த மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு சித்த வைத்தியம் பாா்க்கப்பட்டது. அதையடுத்து, அக்கட்டடம் தேவூரில் காவல் நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், அங்கு சித்த மருத்துவம் நிறுத்தப்பட்டதால், இப்பகுதி மக்கள் எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் தேவூா் காவல் நிலையத்துக்கு வேறு இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. எனவே, தேவூரில் முன்பு செயல்பட்டு வந்த கட்டடத்தில் மீண்டும் அரசு சித்த மருத்துவமனையை தொடங்க வேண்டுமென பாமக சாா்பில் கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தேவூா் நகர பாமக சாா்பில் ஜூன் 17-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அனுமதியளிக்கக் கோரி பாமக தெற்கு மாவட்ட துணை செயலாளா் டி.எஸ்.லட்சுமணன் தேவூா் காவல் நிலையத்தில் மனு அளித்தாா். பின்னா் இதுகுறித்து பாமகவினா் அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இந்நிலையில், தேவூா் போலீஸாா் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கல்லை. இதைத் தொடா்ந்து, பாமகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட இடத்துக்கு முன் பள்ளிக்கூடம் உள்ளதால் அனுமதி மறுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளா் எஸ்.கே.செல்வகுமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றாா்.