இந்தியா வந்தார் அபிஜித் திப்கே! தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி!
தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து...
தில்லியில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தும் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கத்துக்கு இந்திய இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் இன்று (ஜூன் 6) போராட்டம் நடைபெறும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு, தில்லி காவல் துறையினர் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள, அபிஜித் திப்கே அமெரிக்காவில் இருந்து தில்லி வந்தடைந்தார். மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ள நிலையில், தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுபற்றி, இந்தியா வந்துள்ள அபிஜித் திப்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:
“உங்கள் அனைவரையும் ஜந்தர் மந்தரில் சந்திக்கக் காத்திருக்கிறேன். ஒரு புத்தகத்தையும் நமது தேசிய கொடியையும் எடுத்துவர மறந்துவிடாதீர்கள்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, காவல் துறையினருக்கு பூக்களை வழங்குங்கள். இந்த இயக்கத்தை அன்பு மற்றும் அமைதியால் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.