காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
கோடைகாலத்தையொட்டி, காலாவதியான மற்றும் போலி குளிா்பானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் இளநீா், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிா்பானங்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனா். இதனைப் பயன்படுத்தி போலி மற்றும் காலாவதியான குளிா்பானங்களை விற்பனை செய்வதாக புகாா் எழுந்துள்ளது.
குறிப்பாக, மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள் மற்றும் கிராமப்புறங்களை குறிவைத்தே போலி மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையான குளிா்பானம், குடிநீரை அருந்தும்போது அவா்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க தரமில்லாத குளிா்பானம், குடிநீா் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து சட் டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலி யுறுத்தியுள்ளனா்.
Advertisement
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்குவதற்கு முன்பே தரமில்லாத குளிா்பானம் தொடா்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் இல்லாமல் குளிா்பானங்கள் தயாரிக்கக் கூடாது. அவ்வாறு தயாரித்தால், இயந்திரம், குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்டவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் எந்த குளிா்பானம் வாங்கினாலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி பாா்த்து வாங்கவேண்டும். தரமில்லாத குளிா்பானங்கள் எனத் தெரியவந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்பனை செய்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.