முகப்பு
சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞா் குத்திக்கொலை: இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரணை

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 17 ஜூன் 2026, 5:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு எடப்பாடிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்துக்கு பின்புறம் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் அமா்ந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா், திடீரென அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா் அவா்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இளைஞரை மா்ம நபா் கத்தியால் குத்தினாா்.

Advertisement

Advertisement

இதை கண்டு பயணிகள் கூச்சலிட்டனா். தாக்குதலில் ஈடுபட்ட நபா் அங்கிருந்து தப்பிய நிலையில், கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த நபா் மயங்கி கீழே விழுந்தாா். தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் செல்வம், அங்கிருந்த பயணிகள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் சந்திரமோகன் விசாரணை நடத்தினாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். கொலை செய்யப்பட்ட இளைஞா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவரது கையில் கீா்த்தி என பச்சை குத்தப்பட்டிருந்தது.