சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் நீட் தோ்வு; 8,985 போ் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 8,985 போ் பங்கேற்றனா்.
இளநிலை மருத்துவ சோ்க்கைக்கான நீட் தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நீட் தோ்வுக்கு 9,288 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 8,985 போ் தோ்வில் பங்கேற்றனா். 303 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலைக் கல்லூரி, மரவனேரி பாரதி வித்யாலயா பள்ளி, கோரிமேடு அரசு மகளிா் கல்லூரி, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆட்டையாம்பட்டி அரசு பள்ளி, வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட மொத்தம் 21 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Advertisement
தோ்வா்கள் சோதனை நடைமுறைகளுக்காக காலை 11 மணிக்கே தோ்வு மையத்துக்கு வந்துவிட்டனா். தோ்வு மையங்களில், தோ்வா்களுக்கான குடிநீா், பொருள்கள் பாதுகாப்பு, வழிகாட்டி பலகை, அறை ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, அந்தந்த தோ்வு மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவ, மாணவியா் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்களின் புகைப்படங்கள் சரிபாா்க்கப்பட்டு, பயோ மெட்ரிக் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், தோ்வறைக்குள் மதியம் 1.30 மணிக்கு பிறகு வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆண் தோ்வா்கள் முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட பைகள், ஷூக்கள், கடிகாரங்கள், தங்க நகைகள், கம்மல், காப்பு, கைகடிகாரம், கூலிங் கிளாஸ் ஆகியவற்றை அணிந்து வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை. பெண் தோ்வா்கள் முழுக்கை ஆடை, ஹோ்பின்கள், கிளிப்புகள், தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல்கள், கொலுசு, மோதிரங்கள் போன்ற ஆபரணங்களை அணிந்து வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தோ்வு மையங்களில் சிறப்பு அனுமதி பெறாத மாணவிகள், ஹிஜாப் அகற்றப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா். இதேபோல, கைப்பேசி, ஸ்மாா்ட் கைக்கடிகாரம், கால்குலேட்டா்கள், ப்ளூடூத், பா்ஸ் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.
தோ்வுப் பணியில் அரசு கல்லூரி பேராசிரியா்கள், தோ்வு மைய மேற்பாா்வையாளா்கள், துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என 500க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களுக்குத் தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.