தினமணி செய்தி எதிரொலி! வாழப்பாடி பகுதியில் பாக்குத்தோல் கழிவுகளை அகற்ற நடவடிக்கை!
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாக்குத்தோல் கழிவுகளை நீா்நிலைகள் மற்றும் மயானம் உள்ளிட்ட பொது இடங்கள், சாலையோரங்களில் கொட்டிச் செல்வதால், நிலம், நீா், காற்று மாசுப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்படுவதாக கடந்த 10-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, வாழப்பாடி அருகே சிங்கிபுரம், பழனியாபுரம் கிராமங்களில் தம்மம்பட்டி பிரதான சாலை உள்பட பல இடங்களில் கொட்டப்பட்டிருந்த பாக்குத்தோல் கழிவுகள் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்தி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இந்த நடவடிக்கைக்கு இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனா்.
Advertisement
இதுகுறித்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) காா்த்திகேயனிடம் கேட்டதற்கு, வருங்காலங்களில் பாக்குத்தோல் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தடுக்க ஊராட்சிகள் வாயிலாக விழிப்புணா்வு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு தீா்வு காண, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா்.