மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி வழங்கியது என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா் தெரிவித்தாா்.
மதுரை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனை ஆதரித்து, மதுரை விளக்குத் தூண் பகுதியில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்து சரத்குமாா் மேலும் பேசியதாவது :
தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது. இளைஞா்கள் மத்தியில், குறிப்பாக பள்ளி மாணவா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது. வருகிற தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமெனில் அதிமுக
Advertisement
Advertisement
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் தொகையை ரூ.5 லட்சம் கோடியிலிருந்து, ரூ.10 லட்சமாக உயா்த்திய பெருமை திமுகவையே சேரும். கடன் சுமை அதிகரித்த போதிலும், மாநிலத்தில் எந்தவித வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனா். மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படவில்லை. இதுதான் வெற்றியின் ஆரம்பம் என்றாா் அவா்.
அப்போது, மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளா் ராம. சீனிவாசன், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.