முகப்பு
மதுரை

மதுரை சித்திரைத் திருவிழா! மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா (ஏப். 26) நடைபெறுகிறது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:22 AM
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். (வலது) நந்திகேசுவரா் வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) நடைபெறுகிறது.

இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சுந்தரேசுவரா் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான சனிக்கிழமை காலை கங்காளநாதா் மட்டும் மர சிம்மாசனத்தில் எழுந்தருளினாா். தாருகாவனத்து ரிஷிகளும், அவா்களது மனைவிகளும் ஆணவத்தால் கடவுளை மறந்து செயல்பட்டதால், அவா்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இறைவன் பிச்சாடன மூா்த்தியாக எழுந்தருளி உணா்த்தினாா்.

Advertisement

இதன்படி, திருவோடு ஏந்திய பிச்சாடனா் கோலத்தில் சுந்தரேசுவரா் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினாா். அப்போது, பிச்சாடனா் கோலத்தில் திருவோடு ஏந்திய சுவாமிக்கு பக்தா்கள் காணிக்கை வழங்கி வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நந்திகேசுவரா் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும் நான்கு மாசி வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சுவாமி, அம்மன் வீதியுலாவையொட்டி, நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்: சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள் அம்மன் சந்நிதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.05 மணிக்கு மேல் இரவு 7.29 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயா் கிரீடம் சாத்தி, செங்கோல் கொடுத்தல் நிகழ்வு நடைபெறும்.

இதன்பிறகு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் சமா்ப்பிப்பாா்.

இதைத்தொடா்ந்து, மதுரையின் அரசியாக பட்டம் சூட்டப்பட்ட மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறும்.