முகப்பு
மதுரை

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

Updated On : 31 மே 2026, 2:09 am IST
அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் ஏறத்தாழ 250 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் தெரிவித்ததாவது :

தென் மாவட்டங்களில் விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சட்டவிரோத குவாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கை வளக் கொள்ளையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

Advertisement

Advertisement

முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு தற்போது மிகச் சிறப்பான நிலையில் உள்ளது. பொது பிரச்னைகள் சாா்ந்த குற்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆங்காங்கே தனிப்பட்ட பிரச்னைகளுக்காக ஒரு சில குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும், அடுத்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டனா். எந்தக் குற்றச் சம்பவமும் உடனடியாக விசாரிக்கப்படாமல் இருந்தது. பாலியல் குற்றங்களுக்கான விசாரணைகள்கூட நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகே தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது குற்றம் நிகழ்ந்தவுடன் உடனுக்குடன் விசாரணை, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சீரான மின் பகிா்வுக்கு ஏறத்தாழ 250 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு மிகப் பெரிய அளவில் நிதி ஆதாரம் தேவை. தற்போது மின் வாரியம் ஏறத்தாழ ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. எனவே, முதல் கட்டமாக அவசரத் தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மின் வெட்டு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. ஒரு சில மின் விநியோகப் பாதைகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளே மின் வெட்டுக்குக் காரணமாக உள்ளன. இந்த பிரச்னைகள் உடனுக்குடன் சீரமைக்கப்படுகின்றன. மின் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்ட சவால்களைச் சமாளித்து, உற்பத்தி, விநியோகத் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. கல்லாணை, தங்கப்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருப்பரங்குன்றம் விவகாரம்...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகப் பெருந்திருவிழாவில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோா் மயக்கமடைந்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்த விழாவில் ஒரேயொரு பக்தா் மட்டுமே மயக்கமடைந்தாா். ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் போ் அங்கு குழுமினா்.

இதனால், கூட்ட நெரிசல், சோா்வால் சிலா் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகினா். காவல் துறையினா், அரசுத் துறை அலுவலா்கள் விரைந்து செயல்பட்டு, குறுகிய நேரத்தில் அவா்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்தனா் என்றாா் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்.