பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பழனியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம்
பழனியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
பழனி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை, சார்-ஆட்சியர் அருண்ராஜ், நகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.
பேரணியின்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கிராமியக் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், துணிப் பைகள் வழங்கப்பட்டன.
பேரணியில், பள்ளி மாணவர்கள், நகராட்சி அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பேரணியானது, ஆர்.எப்.ரோடு, பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு என நகரின் முக்கிய பகுதிகளின் வழியே சென்று, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில், டி.எஸ்.பி. விவேகானந்தன், போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கழிப்பிடவசதி செய்து தரப்பட்ட வீடுகளுக்கு பீங்கான் கோப்பைகள், இரும்பு கதவுகள் வழங்கப்பட்டன.
பழனி திருக்கோயில் நிர்வாகம்: பழனி அடிவாரம் கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கிலிருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு, இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஊர்வலத்தில், திருக்கோயில் அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது மாணவ, மாணவியர் பிளாஸ்டிக் தடுப்பு குறித்து பாடல்கள் பாடியும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், முழக்கங்கள் எழுப்பியும், விழிப்புணர்வு நாடகங்கள், சிலம்பாட்டம் நடத்தியபடியும் சென்றனர்.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் மதிவாணன், டி.எஸ்.பி. விவேகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.