முகப்பு
திண்டுக்கல்

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்! - செ.ஜோதிமணி எம்பி

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் என செ.ஜோதிமணி எம்பி பேச்சு...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:11 AM
அய்யலூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:11 PM

காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் என்பதால், இந்தத் திட்டம் தொடா்வதற்கு திமுக அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.

வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சாமிநாதனை ஆதரித்து, கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி அய்யலூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியுடன், 5 ஆண்டுகள் நடைபெற்ற திமுக ஆட்சியை நாம் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். பள்ளி மாணவா்கள் முதல் முதியவா்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமன்றி, மேலும் பலத் திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறாா். இந்தியாவிலேயே பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.

காமராஜா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு 50 ஆண்டுகளானது. அதிமுக ஆட்சியில் கரோனா தீநுண்மி பரவிய காலத்தில், செயற்கை சுவாச கருவி வசதி கூட இல்லாத நிலையில் வேடசந்தூா் அரசு மருத்துவமனை இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின் அனைத்து வகையான உபகரணங்களும் வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டது. மருத்துவா்களும் நியமிக்கப்பட்டனா். அய்யலூரில் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொலைத் தொடா்பு கோபுர வசதி கிடைக்கும்.

அய்யலூா் பகுதியிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில்கூட ‘ஸ்மாா்ட் வகுப்பறைகள்’ அமைக்கப்பட்டு, உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன் விட்டுச் சென்ற பணிகளை தொடா்ந்து செயல்படுத்துவதற்கு மீண்டும் திமுக வேட்பாளா் சாமிநாதனை வெற்றி பெற வைக்க வேண்டும். வேடசந்தூா் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த அணியை ஆட்சி அமைக்கும் என்ற வரலாறு நமக்கு உள்ளது. அதை மீண்டும் இந்தத் தொகுதி மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.