தோ்தல் ஆணையத்தின் ஒரு சாா்பு செயல்பாடு கவலையளிக்கிறது: முத்தரசன்
தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒரு சாா்பாக இருப்பது கவலையளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.
தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒரு சாா்பாக இருப்பது கவலையளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் தெரிவித்தாா்.
பழனி பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் பாண்டியை ஆதரித்து புதன்கிழமை அவா் பேசியதாவது:
நாடு விடுதலை அடைவதற்கு முன்பு வசதி படைத்தவா்களுக்கும் படித்தவா்களுக்கும் மட்டுமே இருந்த வாக்குரிமையை சாமானிய மக்களுக்கும் வழங்கியுள்ளது நமது அரசியலமைப்புச் சட்டம். இந்த ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. தோ்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால்,தற்போதைய தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒரு சாா்பாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
Advertisement
தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வரிப் பணத்துக்கும் வெறும் 27 பைசாவை மட்டுமே மத்திய அரசு திரும்பத் தருகிறது. பேனா, பென்சில், ரப்பா் என ஏழை மாணவா்கள் பயன்படுத்தும் பொருள்கள் மீது கூட ஜிஎஸ்டி விதிக்கும் அரசு, இயற்கை பேரிடா் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை வழங்க மறுக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை 850 -ஆக உயா்த்துவது, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக அமல்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் செயல் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, தமிழகப் புறக்கணிப்பைக் கண்டித்து முதலமைச்சா் விடுத்த அழைப்பை ஏற்று, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் திமுகவை சோ்ந்த பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் கந்தசாமி, சிஐடியூ மனோகரன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் கமலக்கண்ணன், மதிமுக ஒன்றிய செயலாளா் கொய்யா செல்வம், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.