திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஒரே ஆண்டில் நிறைவேற்றவில்லை: பெ. சண்முகம்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியவை.
திமுக ஒரே ஆண்டில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்ற தவெகவுக்கு ஆட்சியமைக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கினர். இந்த நிலையில், தவெக ஆட்சியமைந்து 2 வாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் அதுபற்றி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியுள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் நேற்று (மே 25) பேசிய அவர், "நான், திருமாவளவன், வீரபாண்டியன் ஆகியோர் 5 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தோம். அதற்கு முந்தைய நாள் மாலையே, “சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்தோம். சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்” என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு நான் பாராட்டு தெரிவித்தேன்.
Advertisement
Advertisement
மேலும், “அதுவே எங்களின் முடிவு. அதில் உறுதியாக இருக்கிறோம். ஒரு 6 மாதகாலம் போகட்டும். எப்படி ஆட்சி நடக்கிறது என்று பார்ப்போம். அதற்குப் பிறகு அவருடைய ஆட்சியில் இருக்கும் குறைகளையும் குற்றங்களையும் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பின்னர் தீர்மானிப்போம்” என்று மே 5 ஆம் தேதி காலை அவர் சொன்னார்.
இந்தத் தேர்தலில் முதல்வர் தோற்றது மிக வருத்தமான விஷயம். தொகுதிக்கு நல்லது செய்தால் ஜெயிக்கலாம் என்று சொன்னால் இனி யாரும் நம்பாதீர்கள். கொளத்தூரை விட ஒரு தொகுதிக்கு அதிகமாக செய்த ஒரு எம்.எல்.ஏ.வை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு முன்னாள் முதல்வர் அங்கு செய்திருக்கும் விஷயங்களை நீங்கள் சென்னைக்கு சுற்றுலா செல்வதுபோல கொளத்தூருக்குச் சென்று பார்க்கலாம். மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தாலும் தூக்கி வீசிவிடுவார்கள் என்பதற்கு கொளத்தூர் ஒரு உதாரணம். அவரைப் போன்றவர்கள் சட்டமன்றத்தில் இருக்கவேண்டும். ஏற்கனவே ஆண்டவர்கள் இருப்பதன் மூலம் தான் ஆள்பவர்களை நெறிப்படுத்தவும் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்யவும் உதவிகரமாக இருந்திருக்கும்.
அவர் தோற்றது மிக வருத்தமான விஷயம். அதற்கு ஆறுதல் கூறவே நாங்கள் அவரைச் சந்திக்க மே 5 அன்று சென்றோம். அப்போது அவர் எங்களிடம் இவ்வாறே தெரிவித்தார். ஆனால், அப்போது ஸ்டாலின் கூறியதற்கும் இப்போது திமுக வெளிப்படுத்தும் கருத்துகளுக்கும் சம்பந்தமேயில்லை. ஒவ்வொன்றையும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வோன்றிலும் குற்றம் கண்டுபிடுக்கக் கூடிய காரியத்தில் திமுக தலைவர்களும், தொண்டர்களும், திமுக சமூக வலைதள ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், ஸ்டாலின் சொன்னது வேறு.
கடந்தமுறை மு.க. ஸ்டாலின் முதல்முறை முதலமைச்சரானார். மிக நிதானமாக பொறுமையாக ஒவ்வொன்றையும் செய்த அவர், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றவில்லை. ஐந்தாவது ஆண்டில் தான் அதிக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, ஒவ்வொன்றையும் என்னால் சொல்ல முடியும். ஆகவே, உரிய அவகாசத்தை எந்தவொரு ஆளுங்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்குத் தரவேண்டும். அந்தப் பொறுமை என்பது மக்களுக்குத் தேவை” என்று பேசியுள்ளார்.