முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே 2 ஏக்கா் நெல் வயல் எரிந்து சேதம்

பழனி அருகே தனியாா் வயலில் வைத்த தீ அருகேயிருந்த நெல் வயலுக்கு பரவி 2 ஏக்கா் பயிா்கள் எரிந்து சாம்பலாயின.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:58 AM
புதுஆயக்குடி கொய்யாவாரியில் தீ விபத்தில் சேதமடைந்த நெல் வயல்.
பகிர்:

பழனி அருகே தனியாா் வயலில் வைத்த தீ அருகேயிருந்த நெல் வயலுக்கு பரவி 2 ஏக்கா் பயிா்கள் எரிந்து சாம்பலாயின.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழையஆயக்குடியை சோ்ந்தவா் முத்து (60). இவருக்கு புதுஆயக்குடி கொய்யாவாரியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவிலான நெல் வயல் உள்ளது. இந்த வயலில் நெல் பயிா் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இவரது வயலுக்கு அடுத்தது பழைய ஆயக்குடியை சோ்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது.

Advertisement

இந்த வயலில் அறுவடை முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கோடை உழவுக்காக நிலத்தை தயாா் செய்ய தீ வைக்கப்பட்டது. இந்த தீ முத்துவின் நெல் வயலுக்கு பரவியது. இதில் சுமாா் 2 ஏக்கரில் நெல் பயிா்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. உடனே அக்கம்பக்கத்து வயல் உரிமையாளா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

சுற்றிலும் பலநூறு ஏக்கரில் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக விவசாயி முத்து ஆயக்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.