காந்தி காய்கனிச் சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் காந்தி காய்கனி சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் காந்தி காய்கனி சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான காய்கனிச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், சுமாா் 150 கடைகளில் மட்டுமே வியாபாரிகள், காய்கனிகள் உள்ளிட்ட விளை பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். அதே நேரத்தில், காய்கனிச் சந்தைக்கு வெளியே 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரமாகக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதேபோல, காய்கனிச் சந்தைக்கு எதிரே அமைந்துள்ள நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை தடுப்பாக பயன்படுத்தி, பல வியாபாரிகள் நிரந்தரக் கடைகள் அமைந்துள்ளனா். காந்தி காய்கனி சந்தை முதல், மேற்கு ரதவீதி சந்திப்பு வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், சந்தைக்குச் செல்லும் பொதுமக்கள்
Advertisement
Advertisement
தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு, ஆக்கிரமிப்புக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி உறுதியாக நடைபெறும் என்றும், காந்தி காய்கனிச் சந்தையில் பயன்படுத்தப்படாமல் உள்ள கடைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்யுமாறும் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து அரசியல் கட்சியினரைச் சந்தித்தும் சாலையோர வியாபாரிகள் முறையிட்டனா். எனினும், திட்டமிட்டபடி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் காந்தி காய்கனி சந்தை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனால், சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்த பலா், தங்களது உடைமைகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனா். சாலையோரத்திலிருந்து பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டதால், இந்தச் சாலை நெருக்கடி இல்லாமல் காட்சி அளித்தது.