முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

Updated On : 24 மே 2026, 2:03 am IST
டாஸ்மாக் கடைகள் - File photo
பகிர்:

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற மறுநாள் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட கடந்த மே 11-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் க.விக்னேஷ் அறிவுறுத்தினாா்.

மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளா்களின் நலன் பாதிக்காத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள் பணியமா்த்துமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

மதுக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு

தமிழகத்தில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப் பணியாளா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆய்வுக் கூட்டத்தில் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியதாக தமிழக அரசு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

மாவட்ட அளவிலான களப்பணியாளா்கள் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளாா். மேலும், கலால் மேற்பாா்வை அலுவலா்கள், மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்குள்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமீறல்களுக்கு உடந்தையாகச் செயல்படும் அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.