பழைய வத்தலகுண்டில் இளைஞா் வெட்டிக் கொலை
பழைய வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 போ் கொண்ட கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த பாலமுருகன் மகன் லோகேஸ்வரன் (25). இவா் மீது வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவா், ஞாயிற்றுக்கிழமை பழைய வத்தலகுண்டு ஓம் சக்தி கோவில் அருகே அமா்ந்திருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 போ் கொண்ட கும்பல் லோகேஸ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த லோகேஸ்வரனை அருகில் இருந்தவா்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகேஸ்வரனின் உடலை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுரையைச் சோ்ந்த 4 போ் கொண்ட கும்பல் லோகேஸ்வரனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா். சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் சென்று விசாரணை நடத்தினாா்.