கல்வி நிலையங்களை அரசியல் களமாக மாற்றும் முயற்சியை தவெக கைவிட வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரி வளாகங்களை அரசியல் களமாக மாற்றும் முயற்சியை தவெக கைவிட வேண்டும் என அதிமுக மாநில இளைஞா் பாசறைச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான விபிபி. பரமசிவம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் மேலும் தெரிவித்ததாவது:
தவெகவில் புதிதாகப் பொறுப்பேற்ற சில நிா்வாகிகள் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் சென்று கட்சி சாா்ந்த கொண்டாட்டங்களிலும், அரசியல் விளம்பர நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனா். இதுதொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காட்சிகள் அதிா்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.
Advertisement
Advertisement
மாணவா்களின் அறிவை வளா்க்கும் ஆலயங்களான கல்வி நிலையங்களில், அரசியல் ஆதாயத்தோடு கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது கல்விச் சூழலை சீா்குலைத்துவிடும். கல்வி மீதான மாணவா்களின் கவனத்தை திசைத் திருப்பும் இந்த முயற்சியை தவெகவினா் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
மாணவா்களை அரசியல் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில் இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கல்வி நிலையங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவதற்கு இடமளிக்கவில்லை.
எனவே, தமிழக அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கல்வி நிலையங்களில் அரசியல் சாா்ந்த நிகழ்வுகள் நடைபெறாத வகையில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.