தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!
தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி சிபிஎம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து..
சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் தூய்மைப்பணி தனியார்மய முயற்சியை கைவிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. இது தனியார்மயத்தை நோக்கிய முதல் படியாகும்.
தூய்மைப்பணி தனியார்மய முயற்சிகளில் இதுவே தீவிரமான நடவடிக்கையாகும். அவ்வப்போது தனியார்மய முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்வதும், ஊழியர்கள் போராடி தடுப்பதும், தள்ளிப்போடுவதும் கடந்த கால அனுபவமாக இருந்திருக்கிறது. தொழிலாளிகள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களை வெளிமுகமை வைத்து நிரப்புவது என்று அரசாணை வெளியிடப்பட்டதும் மாநகராட்சியின் சில வார்டுகள், மண்டலங்களில் தனியார்மயம் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், 12 மாநகராட்சி தூய்மைப்பணி ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் செயலாக இது உள்ளது. தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும் போது தவெக அதை ஆதரித்திருக்கிறது.
இந்தப் பின்னணியில், இந்த தனியார்மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும். ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்தத் தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது.
எனவே, தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Is sanitation work being privatized CPM urges Tamil Nadu government to abandon the move
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.