மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாடு பாலைவனமாகும்: இபிஎஸ்
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு காலகட்டங்களில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை உள்பட பிற பயன்பாட்டுக்காகவும் 14.75 டிஎம்சி நீரை கர்நாடக அரசுக்குக் கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மீண்டும் பெங்களூரு குடிநீர்த் தேவைக்கென 67 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்.
இந்த அணை கட்டப்பட்டால், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக தனது உபயோகத்துக்காக கர்நாடகம் பயன்படுத்தும் நிலை உருவாகும்" என்று தெரிவித்தார்.