அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!
அரசு இல்லத்தைக் காலி செய்தார் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி...
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் வசித்து வந்த அரசு இல்லத்தை காலி செய்தார்.
சமீபத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும்கட்சியான திமுக 59 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.
2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை பத்தாண்டுகள் ஆளும்கட்சியாக இருந்த அதிமுக, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement
Advertisement
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த எடப்பாடி பழனிசாமி, அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழலில், அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையுள்ள அரசு இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள பங்களா வீட்டில் இன்று (மே. 29) காலை குடியேறினார்.
அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக 15 ஆண்டுகளாக பசுமைவழிச் சாலை வீட்டில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எம்எல்ஏ-வாக மட்டுமே இருப்பதால், அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு புதிய வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி இந்த இல்லத்தில்தான் வசித்து வந்தார்.
2017 முதல் 2021 வரை தமிழக முதல்வராக அவர் இருந்தபோதும், அதன் பிறகு 2021 முதல் 2026 வரை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும், ‘செவ்வந்தி’ என்று அழைக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார்.
ஆனால், 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளதாலும், தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து இல்லாததாலும் விதிமுறைகளின்படி அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழல் உருவானது.
எடப்பாடி பழனிசாமி தற்போது குடியேறியுள்ள புதிய வீடு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அதிமுக கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்துவரும் வேளையில், அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி தினமும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
AIADMK General Secretary Edappadi Palaniswami vacated the government residence he had been occupying on Greenways Road, Chennai.